தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஜெயினை அறுத்த மர்ம நபர்கள்: நள்ளிரவில் அல்லோகலப்பட்ட கிராம மக்கள்..!

தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஜெயினை அறுத்த மர்ம நபர்கள்: நள்ளிரவில் அல்லோகலப்பட்ட கிராம மக்கள்..!



midnight the Jain on the neck of a sleeping woman was cut by miscreants

திட்டக்குடி அருகேயுள்ள வடகரை கிராமத்தில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஜெயினை மர்ம நபர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (43). இவர்களது மகள் பவானி (24) மற்றும் 9 மாத பேரக் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சம்பவத்தன்று இரவு, சேகர் மட்டும் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இரவு சுமார் 1 மணியளவில் மூன்று மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கத்தில் இருந்த பவானி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர்.

இதனையடுத்து பவானியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த பரமேஸ்வரி விழித்துக் கொண்டார். உடனே அருகில் கிடந்த அருவாள்மனையை எடுத்து திருடர்களை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்ததுடன் வலது காலில் கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.

பவானி மற்றும் பரமேஸ்வரியின் அலறல் சத்தத்தத்தை கேட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி வந்து மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது திருடர்கள், தாங்கள்  அணிந்திருந்த செருப்புகளை விட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் குதித்து தப்பிச் சென்றனர். இந்த திருட்டு சம்பவம் கூறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்த விருத்தாச்சலம் காவல்துறை  டி. எஸ். பி அங்கித்ஜெயின் மற்றும் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட வந்த மர்ம நபர்கள் கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் திருட வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் வந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.