மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, 2 வயது குழந்தை என 3 பேர் பரிதாப பலி.. சீர்காழி அருகே சோகம்.!

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, 2 வயது குழந்தை என 3 பேர் பரிதாப பலி.. சீர்காழி அருகே சோகம்.!



Mayiladuthurai Seerkazhi Husband wife and 2 Aged Child Died Electrical Attack

மின்விளக்கு அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி தந்தை, தாய், மகள் என 3 பேர் உயிரிழந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, வேட்டங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் நிவாஸ் இரத்தினம் (வயது 30). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் இரத்தினம் ஈடுபட்டார். அப்போது, மின் இணைப்பு கொடுக்க முயற்சித்த நிவாஸ் இரத்தினத்தின் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. 

கணவரின் மீது மின்சாரம் பாய்ந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி ஹேமா (வயது 25), தனது 2 வயது மகள் நிகன்யாவை இடுப்பில் தூக்கி வைத்தவாறு பதறியபடி வந்துள்ளார். அப்போது, மூவரின் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், குடும்பத்தினர் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Mayiladuthurai

இவர்கள் வீட்டில் மாலை வரை ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்மணி நிவாஸின் வீட்டிற்குள் சென்றபோது சமையல் அறையில் கணவன், மனைவி, குழந்தை என மூவரும் மயங்கியவாறு இருந்துள்ளனர். இவர்களை எழுப்ப முயற்சித்தபோது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. சுதாரித்த பெண்மணி தப்பித்து இருக்கிறார். 

பின்னர், சத்தமிட்டு அக்கம் - பக்கத்தினரை அழைக்கவே, அவர்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் பரிசோதித்தபோது அவர்கள் உயிர் பிரிந்தது அம்பலமானது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக புதுப்பட்டினம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.