மகனை இழந்ததால் சிறையில் வாடிய விவசாயி: கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட்டு கிளை..!

மகனை இழந்ததால் சிறையில் வாடிய விவசாயி: கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட்டு கிளை..!


Madurai High Court branch granted compassionate bail to a farmer who languished in jail after losing his son

விருதுநகர் மாவட்டம், வாடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்ததால், நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் அங்கு  குளிக்கச்சென்றனர். அப்போது மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, நிலத்தின் உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று மோகன்ராஜின் மகன் சிலம்பரசன், வாகன விபத்தில் சிக்கி பலியானார். இதனையடுத்து தனது மகனுக்கு ஈமச்சடங்கு செய்ய தனக்கு இடைக்கால ஜாமீன் அளிக்குமாறு கோரி மோகன்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்தார்.

தீபாவளி பண்டிகை தினத்தன்று மாலை 6 மணி அளவில் இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகி, விபத்தில் இறந்த சிலம்பரசனுக்கு 3 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளதால், தந்தை என்ற முறையில் அவருக்கு ஈமச்சடங்குகளை செய்வதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணையின் முடிவில், மனுதாரர் மீது ஒரேயொரு குற்றச்சாட்டு தான் உள்ளது என்பதை கருத்தில் கொண்டும், அவர் தனது ஒரே மகனை இழந்துள்ளதையும், அவரது சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு இந்த கோர்ட்டு இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறது. மேலும் மனுதாரரை காவல்துறையினர் அழைக்கும் பட்சத்தில் அவர்ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.