நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.. தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு உறுதி! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை.. தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு உறுதி! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு


lockdown in tamilnadu extended till may 17th

தமிழகத்தில் 4.5.2020 முதல் 17.5.2020 அன்று நள்ளிரவு 12.00 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனையடுத்து மேலும் 19 நாட்கள் நீடிக்கப்பட்டு மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றானது குறிப்பிட்ட பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே இருப்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் மாவட்டங்களை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகைகளாக பிரித்து ஆரஞ்சு மற்றும் பச்சை மணடலங்களில் ஒரு சில தொழில்களுக்கு தளர்வு அளிக்கலாம் என அறிவித்தது.

இதனை தொடர்ந்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி "கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 அன்று நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, (Except Containment Zones) பிற பகுதிகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது" எனவும் கூறியுள்ளார்.