மழை நேர அதிவேக பயணம்.. நொடிப்பொழுதில் நடந்த கோர சம்பவம்.. 2 பேர் மரணம்.!

மழை நேர அதிவேக பயணம்.. நொடிப்பொழுதில் நடந்த கோர சம்பவம்.. 2 பேர் மரணம்.!


Kovilpatti Near Area Car Accident at National Highway 2 Died on Spot 2 Injured

மழை நேரத்தில் அதிவேகமாக பயணம் செய்ததால், விபத்து ஏற்பட்டு 2 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கரிமேடு பகுதியை சார்ந்தவர் ஹரி (வயது 44). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியாற்றி வரும் நிறுவனம் சார்பில் மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆளை தொழிலாளர்களை ஏற்றி செல்ல ஒப்பந்த அடிப்படையில் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. 

தனது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? பணியாற்றும் ஊழியர்கள் சரிவர பணியாற்றுகிறார்களா? அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பது குறித்து அவ்வப்போது ஹரி நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கமான விஷயம். 

madurai

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் ஹரி தனது நண்பர்கள் முருகன் (வயது 54), ரகுநாதன் (வயது 39), கோபால் (வயது 40) ஆகியோருடன் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது நிறுவன வாகனத்தை மேற்பார்வையிட வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் பயணித்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி இடைச்செவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுள்ளது. 

இதன்போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகியிருந்த மின்கம்பத்தில் கார் மோதியுள்ளது. கார் அதிவேகமாக பயணித்து விபத்து ஏற்பட்ட காரணத்தால் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், மின்கம்பமும் கீழே சரிந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் நாலாட்டின்புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

madurai

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகளின் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் உதவியுடன் நடந்த மீட்பு பணியில் கோபால் மற்றும் முருகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். 

ஹரி மற்றும் ரகுநாதன் காயமடைந்து இருந்த நிலையில், அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இரவு வேளையில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால், விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதும் நாலாட்டின்புதூர் காவல் துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.