புதுமாப்பிள்ளைக்கு இரயில் பயணத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம் : பத்திரிகை வைக்க சென்றவர் பலியான பரிதாபம்..!

புதுமாப்பிள்ளைக்கு இரயில் பயணத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம் : பத்திரிகை வைக்க சென்றவர் பலியான பரிதாபம்..!



Kanyakumari Nagarcoil Engaged Man Died Slip form Train Near Madurai Way to Chennai

நண்பர்களுக்கு திருமண பத்திரிகை வைக்கச்சென்ற புதுமாப்பிள்ளை இரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி தடிக்காரன்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரின் மகன் கிறிஸ்டியன் டேனியல் (வயது 25). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் வரன்பர்த்து வந்த நிலையில், கடந்தமாதம் நிச்சயம் முடிந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுள்ளன. திருமண அழைப்பிதழும் அச்சிட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள நண்பர்களுக்கு நேரில் சென்று பத்திரிகை வைக்க கிறிஸ்டியன் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயிலில் நேற்று அவர் சென்னைக்கு சென்றுகொண்டு இருந்த நிலையில், மதுரை அருகே இரயில் சென்றபோது டேனியல் சாப்பிட்டுவிட்டு கைகழுவ படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அவர் இரயிலில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். 

kanyakumari

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனை செய்கையில் டேனியல் பிணமாக இருந்துள்ளார். அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக டேனியலின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மதுரைக்கு விரைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பத்திரிகை வைக்கச்சென்ற புதுமாப்பிள்ளை இரயில் பயணத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.