செல்பிபுள்ள.... போராட்டத்தில் பேருந்துக்கு தீ வைத்து புகைப்படம் எடுத்த இளைஞர்?.. கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவங்கள்..!

செல்பிபுள்ள.... போராட்டத்தில் பேருந்துக்கு தீ வைத்து புகைப்படம் எடுத்த இளைஞர்?.. கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவங்கள்..!



Kallakurichi Kaniyamur Violence Issue

கனியாமூர் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இளைஞர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் பயின்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் பெற்றோர் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். 

மேலும், மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரின் கையில் இருந்த இரத்த கறைகள் மாடி படியை பிடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் காவல் துறையினரால் கலைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில், இன்று பல்வேறு அமைப்புகளின் மாணவர் சங்கத்தினர் கனியாமூர் சக்தி பள்ளியில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்த நிலையில், இன்று மாணவர் அமைப்பினர் திரளாக கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு வந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது திடீரென மாணவர் சங்கத்தினர் வன்முறையில் களமிறங்கவே, பள்ளியில் இருந்த பேருந்துகள் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. 

மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சூறையாடப்பட்டு வன்முறையாக போராட்டம் உருவெடுத்துள்ளது. மாணவர் அமைப்பினர் என்று அடையாளப்படுத்திய பலரும் கல்வீச்சு தாக்குதலில் களமிறங்கி பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் காவல்துறை வாகனம் தீ வைக்கப்பட்ட நிலையில், அப்பேருந்தின் மீது ஏறி இளைஞர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்த போராட்டத்திற்கும் சிறுமியின் பெற்றோருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவே தெரிவித்துவிட்டு நிலையில், வன்முறையாளர்கள் திட்டமிட்டு போராட்டத்தை ஏற்படுத்தி ஊக்குவித்துள்ளனர். அவர்கள் குறித்த விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.