தமிழகத்தை தாக்க தயாராகும் கஜா புயல்! கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை தாக்க தயாராகும் கஜா புயல்! கனமழைக்கு வாய்ப்பு



Kaja cyclone in bay of bengal

இந்த மாத துவக்கத்தில் ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழையால் தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் முதல் வாரம் நல்ல மழை பெய்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனால் விவசாயிகள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாகவும், அது புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Kaja cyclone in bay of bengal

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று, ஞாயிற்றுக்கிழமை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறி 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்த புயலானது நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தீவிர புயல் சின்னமாக மாறும். அந்த சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Kaja cyclone in bay of bengal

இந்த புயல் தீவிரம் அடையும் போது, அதற்கு ‘கஜா’ என்று பெயர் சூட்டப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்திலும் மற்றும் கடலூர், புதுச்சேரி, நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.