முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் கைது..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் கைது..!



jayakumar arrest

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அப்போது  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று திமுக ஆதரவாளரை தாக்கி, அரைநிர்வாணத்துடன் சட்டையை அகற்றி நிற்க வைத்தனர். இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட கையோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில்,பூந்தமல்லி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.