விழுப்புரத்தில் பயங்கரம்... நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மக்கள் அதிர்ச்சி...!!



In Villupuram districtr, friends were attacked due to drunkenness by throwing homemade explosives.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகில்  நண்பர்களுக்குள் குடி போதையால் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல்.

புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடியான கௌதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட  விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது நண்பர்களான கபிலன், சத்யராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக நேற்று இரவு எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளார். 

அப்போது மூன்று பேரும் எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். 
போதை தலைக்கேறியதால் கவுதமிற்கும், கபிலனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த கவுதம், மறைத்து வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து கபிலன் மீது வீசியுள்ளார். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் கபிலன், சத்யராஜ் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இரவு நேரத்தில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் கிராம மக்கள் தென்பெண்ணையாற்று மேம்பால பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மது போதையில் தகராறில் ஈடுபட்டிருந்த கவுதம், கபிலன், சத்யராஜ் ஆகிய மூன்று பேரையும் பிடித்து வைத்து, வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் காவல்துறையினர் கிராம மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்டவர்களில், கவுதம் புதுச்சேரியில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கோர்ட்டில் இருந்த காவலய்களின் துப்பாக்கியை திருடி சென்றது போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து கவுதம், கபிலன் மற்றும் சத்யராஜ் ஆகிய மூன்று பேரையும் வளவனூர் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.