தடை செய்யப்பட்ட லாட்டரி தொழிலுக்கு எதிர்ப்பு: மனைவியை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிய கணவன்..!

தடை செய்யப்பட்ட லாட்டரி தொழிலுக்கு எதிர்ப்பு: மனைவியை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிய கணவன்..!



Husband killed wife and escaped with children

திருச்சி மாவட்டம், டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி பகுதியிலுள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். இவரது மனைவி சிவரஞ்சனி (26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிம்மராஜ், சமயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் முகவராக இருந்துள்ளார். இந்த நிலையில், புதிதாக கட்டிய வீட்டை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.28 லட்சத்தை லாட்டரி தொழிலில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்கு அவரது மனைவி சிவரஞ்சனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகறாறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், ரஞ்சனியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இதன் பின்னர் சிவரஞ்சனி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக கூறி பிள்ளைகள் மற்றும் தாயாரை அழைத்துக்கொண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே அவரது வீட்டிற்கு வந்த ரஞ்சனியின் பெற்றோர் வீடு பூட்டி இருப்பதை பார்த்து நரசிம்மராஜிக்கு போன் செய்துள்ளனர்.

செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள், இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள நரசிம்மராஜின் சகோதரிக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போது, பிள்ளைகளை தனது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும், சிவரஞ்சனி அங்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சனியின் உறவினர்கள் உள்ள அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

வீட்டினுள் சிவரஞ்சானி கொலை செய்யப்பட்டு உடல் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் காவல்துறையினர், தப்பியோடிய நரசிம்மராஜை தேடி வருகின்றனர்.