7 மாத கர்ப்பிணியான காதல் மனைவிக்கு கணவனின் அன்பு பரிசு: கனவுகளோடு கலைந்து போன இளம்பெண்ணின் உயிர்..!

7 மாத கர்ப்பிணியான காதல் மனைவிக்கு கணவனின் அன்பு பரிசு: கனவுகளோடு கலைந்து போன இளம்பெண்ணின் உயிர்..!



Husband gifted death to loving wife who is 7 months pregnant

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அற்புதராஜ் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். விருத்தாசலம், வடக்கு பெரியார் நகர் அருகேயுள்ள சுதாகர் நகரை சேர்ந்தவர் லதா. இவரது மகள் சக்தி (18). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு பேக்கரி கடையில் பணி புரிந்தார்.

இந்த நிலையில், ஒரே மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த அற்புதராஜிக்கும், சக்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதன் காரணமாக சக்தி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே, 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். தனக்கு வளையகாப்பு நடத்த வேண்டும் என தன்னுடைய கணவர் அற்புதராஜியிடம் சக்தி கூறியுள்ளார். அதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளையகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று லதா வேலைக்கு சென்றுள்ளார், வீட்டில் தனியாக இருந்த சக்தி காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தன. வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் லதா வீட்டுக்கு வந்த போது தனது மகள் இறந்து கிடந்தை கண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சக்தியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் அவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அற்புதராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: - எனது மனைவி சக்தி வளையகாப்பு நடத்த வேண்டும் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் கிடந்த கரண்டியால் தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரத்தில், அவரது கழுத்து, முகம் ஆகிய பகுதியில் கையால் குத்தி விட்டு வீட்டில் இருந்து மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்று விட்டேன்.  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அற்புதராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.