சுத்தியலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இளைஞரால் பரபரப்பு..!

சுத்தியலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இளைஞரால் பரபரப்பு..!



husban surrender in police station with hammer at chengam

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கரிமலைபாடி பகுதியை சேர்ந்தவர் விஜி (34). இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தனது விவசாய நிலத்தை மனைவியின் கண்காணிப்பில் விட்டுவிட்டு, இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜி தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு எழுந்த வாக்குவாதம், இருவருக்கும் இடையில் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்த நிலையில், அந்த ஊரில் கோவில் திருவிழா நடைபெற்றதால் பிள்ளைகள் இருவரும் திருவிழாவுக்கு அனுப்பி வைத்த விஜி, தனது மனைவின் மீது தனக்கு இருந்த சந்தேகம் குறித்து கேட்டுள்ளார். இதன் காரணமாக் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விஜி அங்கிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இந்த தாகுதலில், செல்வியின் மண்டை உடைந்தததால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின்னர் விஜி, மேல் செங்கம் காவல் நிலையத்தில்  மனைவியை கொலை செய்ததை கூறி சரணடைந்தார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.