அடிக்கடி காணாமல் போன நகைகள்...! திருட்டை கண்டுபிடிக்க வீடு உரிமையாளர் போட்ட பக்கா பிளான்.! வசமாக சிக்கிய பெண்.!

அடிக்கடி காணாமல் போன நகைகள்...! திருட்டை கண்டுபிடிக்க வீடு உரிமையாளர் போட்ட பக்கா பிளான்.! வசமாக சிக்கிய பெண்.!



house owner caught jewels theft

நாமக்கல் மாவட்டத்தில் தங்க நகை திருடியவரை சிசிடிவி கேமரா மூலமாக வீட்டின் உரிமையாளரே கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியிலேயே பெட்டி கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி தங்க நகைகள் காணாமல் போயிருக்கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் அவரது வீட்டில் உள்ள பீரோவிற்கு எதிராக யாருக்கு தெரியாமல் சிசிடிவி கேமராவை பொறுத்தி கண்காணித்து வந்துள்ளார்.

குணசேகரனின் பேத்தியை தினமும் குளிக்க வைக்க கண்டி புதூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் வருவது வழக்கம். கடந்த நான்கு மாத காலமாக குணசேகரனின் வீட்டிற்கு வந்து சென்ற லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவைத் திறந்து அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த குணசேகரன் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

சிசிடிவி ஆதாரத்துடன் குணசேகரன் கொடுத்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  லட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை மீட்டனர். நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை சாமர்த்தியமாக வீட்டின் உரிமையாளர் பிடித்து  கொடுத்திருப்பதற்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.