17 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

17 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Heavy rain alert for 17 districts

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை உட்பட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 8-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

9-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

10-ம் தேதி மற்றும் 11, 12-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

heavy rain alert

அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சேலம் ஓமலூரில் 10 சென்டிமீட்டர் மழையும், ராணிப்பேட்டை சோளிங்கரில் 8 சென்டிமீட்டர் மழையும், விழுப்புரம், ஏற்காடு, நீலகிரியில் 7 சென்டிமீட்டர் மழையும், அவலாஞ்சி, பந்தலூரில் 6 சென்டிமீட்டர் மழையும், செஞ்சி, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரளா கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதி, அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதி, மத்திய வங்ககடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகமாக வீசப்படும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.