விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

விமான நிலையத்தில் 10 வயது சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!



health minister ma subramanian help to young boy treatment

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ்-ரேணுகாதேவி தம்பதியினரின் மகன் நவீன்.10 வயது நிரம்பிய நவீனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுவனின் குடும்பத்தினர் ஏழ்மை என்பதால் அவர்களிடம் மருத்துவத்திற்கு தேவையான பணவசதி இல்லை.

முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டம் காா்டு இருந்தால் சிறுவனுக்கான சிகிச்சையை இலவசமாக செய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவ காப்பீடு காா்டு இல்லை. தற்போது அவர்கள் குடும்பம் வேறுபகுதிக்கு வீடு மாற்றி சென்று விட்டதால் குடும்ப அட்டையும் இல்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையம் சென்றுள்ளார்.

இதையறிந்த சிறுவனின் பெற்றோர், சென்னை விமான நிலையத்துக்கு சென்று அமைச்சரை சந்தித்து தங்களது 10 வயது மகனின் சிறுநீரக நோய் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்தனர். அவற்றை விளக்கமாக கேட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனடியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறி சிறுவன் நவீனுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.