ஷோரூமிலேயே தீக்கிரையான இ-ஸ்கூட்டர்கள்... பதறவைக்கும் சம்பவம்.. நடந்தது இதுதான்..!

ஷோரூமிலேயே தீக்கிரையான இ-ஸ்கூட்டர்கள்... பதறவைக்கும் சம்பவம்.. நடந்தது இதுதான்..!



fire-accident-in-e-scooter-showroom

மின்சார ஸ்கூட்டரில் சார்ஜ் போட்டபோது, பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த 17 மின்சார ஸ்கூட்டர்களும் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பூந்தமல்லியை அடுத்த போரூர்-குன்றத்தூர் சாலையில் ராஜாராம் என்பவர் மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஷோரூமில் 5 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு விற்பனை நடைபெற்றுள்ளது. 

அத்துடன் இவர்களிடம் மின்சார ஸ்கூட்டர் வாங்கியவர்கள் சிலர் சர்வீஸ் செய்வதற்காகவும் தங்களது ஸ்கூட்டர்களை கொடுத்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து நேற்று மாலை ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அதில் உள்ள பேட்டரி வெடித்து தீ பிடித்துள்ளது. 

chennai

இதனைக்கண்ட கடை ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்தனர். ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஷோரூமிற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்தபோதிலும் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 புதிய மின்சார ஸ்கூட்டர் மற்றும் சர்வீஸ் செய்வதற்காக விட்டுச்சென்ற 12 ஸ்கூட்டர்கள் என மொத்தம் 17 ஸ்கூட்டர்கள் தீயில் கருகி நாசமாகியது. மேலும், ஷோரூமில் இருந்த சில பொருட்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பானது கிட்டத்தட்ட 8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக போரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.