பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை அடித்து விளாசிய பிரபல நடிகை.! வீடுதேடி சென்று தட்டி தூக்கிய போலீஸ்!



famous actress arrested

சென்னை குன்றத்தூரில் அரசுப் பேருந்துல் படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கெருகம்பாக்கம் அருகே சென்ற போது பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், மேற்கூரை மீது ஏறியும் பள்ளி மாணவர்கள் பயணித்தனர்.

இதனை பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், பேருந்து நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்றவுடன் ஓட்டுநரை பார்த்து , இப்படியா பேருந்து ஓட்டுவீர்கள் என கேட்டது மட்டுமல்லாமல், படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை சரமாரியாக அடித்து விளாசி கீழே இறக்கிவிட்டுள்ளார். அடித்தது மட்டுமல்லாமல் அறிவு கெட்ட நாய்களே என கோவத்தில் திட்டியுள்ளார்.

அவர், தன்னை போலீஸ் எனக் கூறி ஏமாற்றி பள்ளி மாணவர்களை தாக்கியதுடன், நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த பெண் நடிகை ரஞ்சனா நாச்சியார் என தெரிந்தது. அவர் விஷால் நடித்த துப்பறிவாளன், இரும்புத்திரை, மற்றும் ரஜினி நடித்த அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களைத் தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.