முக்கிய அறிவிப்பு... குடும்ப அட்டைதாரர்கள்; இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!!
சென்னையில் வரும் 11 ஆம் தேதியன்று குடும்ப அட்டைதாரர்கள் பெயர், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கு வசதியாக சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை அனைவரும் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு மாதமும், மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் 11.03.2023 அன்று, சென்னையில் இருக்கும் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
முகவரி மாற்றம், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.