போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு...!! கடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி..!!

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு...!! கடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி..!!



Fake brewery discovered... Cuddalore District Police in action.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில், போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த மாதம் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் தலைமையில் காவல்துறையினர் சரகம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர், வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்தனர் அப்போது அவரிடம் இருந்து போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்வதாகவும், அதை வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் நான்கு தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலையில் உள்ள நடுதொரடிப்பட்டு பகுதியில் போலி மதுபானம் தயார் செய்யும் ஆலை இருந்ததை  கண்டுபிடித்தனர்.

காவல்துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 20-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் தயார் செய்யப்பட்ட 454 போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், பாட்டில் மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட போலி லேபிள்கள், மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த கடலூர் தனிப்படை காவலர்கள், அதை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அதிகாரி மோகன்ராஜிடம் ஒப்படைத்தனர். 

இதைத் தொடர்ந்து போலி மது ஆலை நடத்தி வந்தது குறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கல்வராயன் மலையை சேர்ந்த ஒருவர் என்று நான்கு பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.