கல்லூரி காதல்: மாமனாரின் சொத்து கிடைக்காத விரக்தியில், இளம் மனைவி கழுத்தை நெரித்து கொலை.. ஈரோட்டில் குடும்பமே கைது.!

கல்லூரி காதல்: மாமனாரின் சொத்து கிடைக்காத விரக்தியில், இளம் மனைவி கழுத்தை நெரித்து கொலை.. ஈரோட்டில் குடும்பமே கைது.!



Erode Gobi Girl Poorani Killed by Husband Madhan Kumar Both Love from College time 

 

தனது வாழ்க்கைத்துணையை சுயமாக முடிவெடுத்து கரம்பிடிக்கும் பெண்கள், எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஒருவனின் தேவை சொத்துதான் என அவனின் வாயில் உண்மை வந்துவிட்டால், அவனிடம் சுதாரிப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மகள் பூரணி. அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, சின்னியாம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் - பூங்கொடி தம்பதி மதன்குமாருடன் காதல் வயப்பட்டுள்ளார். 

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எனினும், பொருளாதார ரீதியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முதலில் நீ மட்டும் போதும் என்று காதல் வார்த்தை பேசிய மதனின் வார்த்தையில் விழுந்த பூரணி, தனது பெற்றோர்கள் சொல்லை மதிக்காமல் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்தார். 

காதலரை கரம்பிடித்த பெண்மணி, பெங்களூரில் கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும், இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கின்றனர். இதனிடையே, பூரணி கர்ப்பமானதால் தனது கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். 

அங்கு உனது தந்தையிடம் வரதட்சணை வாங்கி வா என கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் கேட்க, அதற்கு மறுப்பு தெரிவித்த பூரணி எனது தந்தையின் சொத்துக்கள் ஏதும் எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். இதில் விருப்பம் இல்லாத கணவர் மதன் குமார் வெறுப்புடன் இருந்து வந்துள்ளார். ஆனால், அதனை காட்டிக்கொள்ளவில்லை. 

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பூரணிக்கு குழந்தை பிறக்கவே, பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் பேசாமல் இருந்த அவரின் பெற்றோர் மகள் மற்றும் பேத்தியை பார்க்க ஆவலுடன் வந்துள்ளனர். அவர்களை மறித்து பிரச்சனை செய்த மதன் குமார் மற்றும் குடும்பத்தினர், சொத்து கேட்டு இருக்கின்றனர்.

இதனிடையே, கடந்த அக்டோபர் 10ம் தேதி குழந்தைக்கு பால் கொடுக்கும்போது பூரணி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியதாக கணவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்தபோது மரணம் உறுதியானது. இந்த விஷயம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூரணியின் தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

பிரேத பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமாகவே, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மதன் குமார் மனைவியை கொலை செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த மதன் குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், மதன் குமார் மற்றும் அவரின் தாய் - தந்தை, மருமகளின் சொத்துக்கு ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், தந்தையின் சொத்து தனக்கு வேண்டாம் என்ற முடிவில் பூரணி விடாப்பிடியாக இருக்கவே, சொத்து வராது என்ற ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளது. 

இந்த கொலைக்கு மதன்குமார் மற்றும் அவரின் பெற்றோர் யுவராஜ் - பூங்கொடி ஆகியோர் உடந்தையாகவும் இருந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.