8 மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடப்பட்ட மின் அளவீடு... மின் கட்டணமும் உயர்ந்ததால்... திருப்பூரில் வசிப்பவர்கள் அதிர்ச்சி...!
8 மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடப்பட்ட மின் அளவீடு... மின் கட்டணமும் உயர்ந்ததால்... திருப்பூரில் வசிப்பவர்கள் அதிர்ச்சி...!

கடந்த எட்டு மாதங்களாக, திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பயன்பாட்டு அளவு கணக்கிடப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கணக்கிடப்படாத அனைத்து மாதங்களுக்கும் சேர்த்து ஒரே கணக்கீடாக அளவிடப்பட்டு மின் கட்டணம் செலுத்துமாறு கூறுவதால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார அளவு கணக்கிடப்படப்படுவது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்களிடையே மாதம் தோறும் மின்சாரம் கணக்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த எட்டு மாத காலமாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் வடக்கு மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட குண்டடம் டவுன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் கணக்கிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த எட்டு மாதங்களுக்கும் சேர்த்து தற்போது மின்சாரம் கணக்கிடப்பட்டு பணம் செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 100 - 200 யூனிட் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட தொகையும், 200 - 300 யூனிட் மின்சாரத்திற்கு கூடுதல் தொகையும், 300 - 500 யூனிட் மின்சாரத்திற்கு இன்னும் கூடுதலான தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் எட்டு மாதங்களுக்கு சேர்த்து மின்சாரம் கணக்கிடப்பட்டுள்ளதால் மின் பயன்பாட்டு அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தவாறு பயன்பாட்டு கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டிற்கு ரூ.500 முதல் ரூ.700 வரை மின் கட்டணம் செலுத்துவோம். ஆனால் தற்போது ரூ.32 ஆயிரம் மின்சார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று குடியிருப்புவாசி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.