"பணிவும், பாய்ச்சலும்" அதிரப்போகும் வேலூர் தொகுதி.. மீண்டும் கதிர் ஆனந்த்..! 



dmk-vellore-candidate-as-kathir-anand

பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதனால் மக்களுக்கான நலப்பணிகளை செய்வதுடன், தொடர்ந்து தீவிர களப்பிரச்சாரத்திலும் இறங்கி இருக்கிறார்.

இந்தியாவே எதிர்பார்க்கும் 2024 மக்களவை தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் பாஜக தலைமையிலான கூட்டணி தனது தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்புடன் மேற்கொள்ளும் அதே வேளையில், கடந்த 10 ஆண்டுகளாக இன்னலில் தவிக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்தது, மீண்டும் அனைவருக்குமான ஆட்சியை நிலைநாட்ட காங்கிரஸ், திமுக உட்பட பிற கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநில அளவில் ஆட்சியை திறம்பட வழிநடத்தி வரும் திமுக, தொடர்ந்து மக்களவை தேர்தலிலும் போட்டியிட தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி (1) சேர்த்து உள்ள 40 தொகுதிகளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடை நிறைவு செய்து தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை தேர்தல் விருப்ப மனுக்களையும் வழங்கி வருகிறது. 

திமுகவின் இயக்கத்தில் மூத்த தலைவராகவும், கலைஞரின் செல்லப்பிள்ளையாகவும் கவனிக்கப்பட்ட துரைமுருகன் தொடர்ந்து மாநில அரசியலில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், அவரின் மகன் கதிர் ஆனந்தை (Kathir Anand) கடந்த தேர்தலில் இருந்து மக்களவைக்கு அனுப்பி வைத்து மக்களுக்கான நலப்பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்தார். கடந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதியில் பல்வேறு நலப்பணிகளை அவர் செய்து வந்தார். நடப்பு 2024 மக்களவை தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட மீண்டும் கதிர் ஆனந்த் விருப்ப மனு இன்று வாங்கி கழக தலைமையிடம் அளித்தார். ஏற்கனவே தொகுதி மக்களுக்காக சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது, கே.வி குப்பம் பகுதியில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை தொகுதி மக்களின் நலனுக்காக சட்டரீதியாக தடுக்க உதவியது என தான் செய்த நலப்பணிகளை தொடர்ந்து குறிப்பிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

dmk

திமுக சார்பில் வேலூர் தொகுதியில் இருந்து போட்டியிட கதிர் ஆனந்த் விருப்ப மனு வாங்கியதை போல, அதே தொகுதியை சேர்ந்த திமுக அவைத்தலைவர் முகம்மத் சாஹு விருப்பமனு வாங்கினார். கதிர் ஆனந்த் தொகுதியில் இன்னொருவர் வாய்ப்பு கேட்கிறாரே என கழக தலைமை இருந்தபோது, தான் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் விருப்ப மனு வாங்கி உள்ளே வந்ததாகவும், தம்பி கதிர் ஆனந்த் இருக்கையில் நான் அங்கு போட்டியிட விருப்ப மனு வாங்கவில்லை என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கதிர் ஆனந்த் விருப்ப மனு அறைக்குள் வந்தது, வாருங்கள் முதல் வெற்றி வேட்பாளரே என திமுக மூத்த தலைவர்களால் புகழாரம் சூட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமனு வாங்கி திமுக தலைமையான தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே.என் நேரு  உட்பட குழுவினர் முன் வேட்பாளர்கள் பலரும் அமர்ந்து கேள்விகளுக்கான பதிலை அளித்தபோது, திமுக எம்.பி கதிர் ஆனந்த் மட்டும் இருக்கையில் அமராமல் நின்றவாறு தனது மரியாதை செயலை வெளிப்படுத்தினார். அச்சமயம் முதல்வர் மு.க ஸ்டாலின், வேலூரில் களநிலவரம் குறித்து கேட்டறிந்து, அங்கு பாஜகவினர் போட்டி தன்மையை ஏற்படுத்தினாலும் நாமே வெற்றி பெற வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் கதிர் ஆனந்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். இம்முறை எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என ஏ.சி சண்முகம் சார்பிலும் தொடர்ந்து அங்கு பல இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

மூத்தோர்கள் முன் பணிவு மற்றும் செயலில் பாய்ச்சல் என இருந்து வரும் கதிர் ஆனந்த், நடப்பு தேர்தலிலும் வெற்றியை அடைந்து மக்களுக்கான நலப்பணியை ஆற்ற வேண்டும் என தலைமையும் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கேற்ப அவரும் செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.