ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புதிய 'டிஜிட்டல்' நூலகம்: அரிய தகவல்களை வெளியிட திட்டம்.!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புதிய 'டிஜிட்டல்' நூலகம்: அரிய தகவல்களை வெளியிட திட்டம்.!



digital-library-at-the-anaimalai-tiger-archive

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தாவரங்கள், வனவிலங்குகளின் அரிய தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள, இணையதளத்தில் ‘டிஜிட்டல் நுாலகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயிர்நாடியான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளின் ஒரு அங்கம் தான், ஆனைமலை புலிகள் காப்பகம். முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள் ஒன்றாக உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. பல அரிய வகை வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் இங்கு உள்ளன. அதிக அளவில், புலி, சிறுத்தை, யானைகள், வரையாடு, புள்ளி மான்கள் என, பல வனவிலங்குகள் உள்ளன.

முட்புதர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், ஈர இலையுதிர் காடுகள், சோலைக்காடுகள் என, ஒன்பது வகையான காடுகள் ஆனைமலையில் உள்ளன. ஆரோக்கியமான இந்த காடுகளில், வால்பாறை ரோட்டோரத்தில் கூட்டம் கூட்டமாக, சாதாரணமாக பறக்கும் அரிய வகை இருவாச்சி பறவைகள், டாப்சிலிப்பில் மரங்களில் கோடிக்கணக்கில் முகாமிட்டு மிளர வைத்த மின்மினி பூச்சிகள், பெருங்கூட்டத்துடன் காணப்படும் யானைகள் என, புலிகள் காப்பகத்தில் கானக்கிடைக்காத காட்சிகளை கானலாம்.

இதுவரை, பல வகையான நிகழ்வுகளை வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர். மனிதர்களின் காலடி படாத பல இடங்களும், கண்டறியப்படாத பல தாவரங்கள், வனவிலங்குகள் புலிகள் காப்பகத்தில் உள்ளன.

இந்த தகவல்களை ஒருங்கிணைத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மகத்துவத்தை உலகுக்கு தெரியப்படுத்த, வனத்துறையினர் ‘டிஜிட்டல்’ நுாலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புலிகள் காப்பகத்துக்கு, https://www.atrpollachi.com/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தை, நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது, வனத்துறையினர் புதுப்பித்துள்ளனர்.

இதில், டிஜிட்டல் நுாலகம் என்ற பகுதியை உருவாக்கியுள்ளனர். இதில், பல அரிய புகைப்படங்கள் மற்றும் புலிகள் காப்பகத்தின் அரிய தகவல்களை விரைவில் மக்கள் டிஜிட்டல் நூலகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:-

புலிகள் காப்பகத்துக்கான டிஜிட்டல் நுாலகம் பகுதியில், புலிகள் காப்பகத்திலுள்ள அரிய வகை தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், வனவிலங்குகள் என, அனைத்தின் புகைப்படங்கள் மற்றும் அவற்றில் அரிய வகை தகவல்களை சேர்த்து வருகிறோம். பூச்சிகள், வனவிலங்குகளின் முழுமையான தகவல்கள் நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவின் மற்ற வனப்பகுதிகள், காலநிலை என அனைத்து கோணங்களிலும் ஒப்பீடு செய்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு, முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்.

இந்த தகவல்கள் நிச்சயம், மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவும். புலிகள் காப்பகத்தின் மகத்துவத்தை மக்கள் அறிவார்கள் என்று தெரிவித்தார்.