44 வது செஸ் ஒலிம்பியாட்: பிரம்மாண்ட நிறைவு விழாவில் தல தோனி பங்கேற்பு..!

44 வது செஸ் ஒலிம்பியாட்: பிரம்மாண்ட நிறைவு விழாவில் தல தோனி பங்கேற்பு..!


Dhoni participation in the grand closing ceremony of the 44th Chess Olympiad

சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற  44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். 

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழரின் பாரம்பரியம் ,பண்பாடு, கலாச்சாரத்தை கூறும் விதமாக கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கில் செஸ் போட்டிகள் நடைபெற்றன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தனர்.

போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து இன்று நிறைவு விழா நடைபெற உள்ளது.  இன்று  மாலை நடைபெறும் விழாவுக்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இந்த விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி,  உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவரும்  கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஒலிம்பியாட்  போட்டியின்  நிறைவு விழாவை ஒட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது