ஆவின் பால் பாக்கெட்டிற்குள் இறந்துகிடந்த தவளை... அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்..! பரபரப்பு சம்பவம்..



Dead frog found in Aavin milk pocket near Kallakurichi

ஆவின் பால்பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவர் நேற்று மாலை திருக்கோவிலூர் தெற்கு தெருவில் பாஸ்கர் என்பவர் நடத்திவரும் ஆவின் பாலகத்தில் தனது வீட்டு தேவைக்காக பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, அவர் வாங்கிவந்த பால் பாக்கெட்டிற்குள் இறந்தநிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிவநேசன், தவளை இறந்து கிடந்த பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு, தான் பால் வாங்கிய பாஸ்கரின் ஆவின் பாலகத்திற்கு சென்று, அவரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாஸ்கரன் விழுப்புரம் மாண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

உடனே சிவநேசனின் வீட்டிற்கு சென்ற விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி வந்தது? என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, நாள்தோறும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தும் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்தநிலையில் தவளை கிடந்ததாக கூறப்படும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.