"கஜா புயலால் கடும் சேதங்கள் உறுதி! மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்" வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

"கஜா புயலால் கடும் சேதங்கள் உறுதி! மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்" வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


damage-expected-because-of-kaja-cyclone

கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தில் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

கஜா புயலால் சென்னையில் 14-ம் தேதியில் இருந்து மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த வட தமிழக கடற்கரைப்பகுதிகளும் 14-ம் தேதியில் இருந்து மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை கஜா புயல் சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. ஆதலால், காற்றுபலமாக வீசுவதற்கு வாய்ப்பில்லை, ஆனால், காற்று லேசான அளவில் இருக்கும். இந்த புயலின் இழுவை விளைவு காரணமாகச் சென்னைக்கு 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் மழை கிடைக்கும். அடுத்த 14 முதல் 16-ம் தேதிவரை சென்னையில் முன்பு கணித்ததைக் காட்டிலும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

damage expected because of kaja cyclone

டெல்டா பகுதியில் புயல் கரையைக் கடக்கும்போது மிக,மிக கனமழையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் மழை இருக்கும். ஆனால், வர்தா, தானே புயல் அளவுக்கு வலிமையானதாக கஜா புயல் இருக்காது.

அடுத்த இரு நாட்களில் கஜாபுயல் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் மேற்கு, தென்மேற்காக நகர்வதால், வலிமையானதாக இருக்காது என்று கணிக்கப்பட்டது. அதன்படி, காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ வரையிலும் நிலத்தை அடையும் போது 90 முதல் 100 கி.மீ வரையிலும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடும் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும்  ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் குடிசை வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் கட்டப்படாத தகரங்கள் ஆகியவை காற்றில் பறக்கும் அபாயம் ஏற்படும். மேலும் மரங்கள் முறிந்து விழவும், வேரோடு சாயாவும், நெல் பயிர்கள், வாழை, பப்பாளி மரங்கள் சாயவும்  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

damage expected because of kaja cyclone

இன்று மாலை முதல் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் நடுக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும் 15ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.