திருநங்கையாக மாறிய அன்பு மக(னு)ளுக்கு, மஞ்சள் நீராட்டுவிழா.. பெற்றோர்கள் பாசமிகு செயல்.!

திருநங்கையாக மாறிய அன்பு மக(னு)ளுக்கு, மஞ்சள் நீராட்டுவிழா.. பெற்றோர்கள் பாசமிகு செயல்.!


Cuddalore Virudhachalam Transgender Parents Agrees Son Decision

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், இந்திரா நகரில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கொளஞ்சியின் மனைவி அமுதா. இவர் விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார். தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற 21 வயது மகன் இருக்கிறார். இவர் டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில வருடமாக நிஷாந்த் தனது உடலில் பாலியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனித்து, தன்னை திருநங்கையாக உணர்ந்து இருக்கிறார். இதனையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சம் அடைந்தவர், தனது பெயரினை நிஷா என மாற்றி இருக்கிறார். 

Cuddalore

மகனின் உணர்வுகளை புரிந்துகொண்ட பெற்றோர், நிஷாவாக மாறிய மகனை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, முழு திருநங்கையாக நிஷா உருப்பெற்றார். மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்த முடிவெடுத்த பெற்றோர், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இதனையடுத்து, நிஷா மற்றும் அவரின் குடும்ப உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நிஷாவுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். திருநங்கையாக மாறிய மகனுக்கு பெற்றோர்கள் அளித்த அங்கீகாரம் பலதரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.