விவசாய பணியின் போது அலட்சியம்; 10 வயது சிறுவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி..!



Cuddalore Tittakudi Student Died Tractor

 

தனது தாய்மாமாவுடன் விவசாய பணிகளுக்கு சென்ற சிறுவன், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, பெருமுளை கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி. இவரின் மகள் ரேகா (வயது 34). அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவரின் மகன் பழனிவேல் (வயது 43). தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுக்கு முடிந்து 10 வயதுடைய வரதராஜன் (வயது 10) என்ற மகன் இருக்கிறார். 

பழனிவேல் பக்ரைனில் பணியாற்றி வரும் நிலையில், ரேகா பெருமுளை கிராமத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். வரதராஜன் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவனின் தாய்மாமா மணிகண்டன் (வயது 28), புதிய டிராக்டரை வாங்கியுள்ளார்.

இதனை உறவினரான அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த தினேஷ் என்பவரின் நிலத்தில் உழவு பணிகளுக்காக மணிகண்டன் இயக்கி சென்றுள்ளார். மணிகண்டனுடன் சிறுவன் வரதராஜனும் சென்றார். அப்போது, வரப்பில் டிராக்டர் இருக்கையில் வரதராஜன் தவறி கீழே விழுந்துள்ளான். 

அடுத்த நொடியே சிறுவன் வரதராஜனின் தலைமீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் சிறுவன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினான். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திட்டக்குடி காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.