எம்.எல்.ஏவிடம் பணம் பறிக்க கணவன்-மனைவி போட்ட பக்கா ப்ளான்..! வசமாக சிக்கவைத்த திருத்தணி எம்.எல்.ஏ.!!

எம்.எல்.ஏவிடம் பணம் பறிக்க கணவன்-மனைவி போட்ட பக்கா ப்ளான்..! வசமாக சிக்கவைத்த திருத்தணி எம்.எல்.ஏ.!!



couple-arrested-for-trying-to-cheat-mla

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.சந்திரன். கடந்த 25-ஆம் தேதி இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், நான் தலைமைசெயலகத்தில் இருந்து உள்துறை டி.எஸ்.பி. பேசுகிறேன். உங்கள் தொகுதி சம்பந்தமாக ஒரு புகார் வந்துள்ளது. அதை சரிசெய்ய ரூ.25 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார்.
 
இதேபோல, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால், அவரும் 25 லட்ச ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை மிரட்டி பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள் எனக் கருதிய திருத்தணி எம்.எல்.ஏ, இது குறித்து திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியவர்களை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி எம்.எல்.ஏவின் உதவியாளர் பணத்தை கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, பணத்தை வாங்க வந்தவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது மனைவி யசோதாவுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

அவர்களிடம் இருந்து போலியான அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம், 2 செல்போன்கள், கார் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் கைப்பற்றினர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத் தி சிறையில் அடைக்கப்பட்டனர்.