கோவையில் திருநங்கை கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி பின்னணி; ஆள்மாறிப்போய் பரிதாபமாக பறிபோன உயிர்.!

கோவையில் திருநங்கை கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சி பின்னணி; ஆள்மாறிப்போய் பரிதாபமாக பறிபோன உயிர்.!



Coimbatore Transgender Women Murder Case Police Investigation 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் எல்.ஐ.சி காலனியில் வைசத்து வருபவர் தனலட்சுமி (வயது 39). இவர் கோவை ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை சென்றுள்ளார். தனலட்சுமியின் தோழி மாசிலாமணி (வயது 32),  வடவள்ளி - மருதமலை சாலையில் உள்ள இந்திரா நகரில் வசிக்கிறார். திருநங்கையான மாசிலாமணி வீட்டில் மணி என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார்.

இந்நிலையில், தைப்பூசத்திற்காக மும்பையில் இருந்து கோவை திரும்பிய தனலட்சுமி, மாசிலாமணியின் வீட்டில் இருந்துள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி மணி, மாசிலாமணி ஆகியோர் வெளியே சென்றநிலையில், தனலட்சுமி வீட்டிற்குள் இருந்தார். அச்சமயம், மர்ம நபர் தனலட்சுமியை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பிச்சென்றார்.

கொலையாளியை கண்டறிய காவல் துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த, சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் தினேஷ் (வயது 38) குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். தினேஷை கைது செய்த காவல் துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

Coimbatore

விசாரணையில், "மருதமலை முருகன் கோவிலுக்கு தினேஷ் அவ்வப்போது வந்துசென்ற நிலையில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வந்துள்ளார். அப்போது மருதமலை பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அவரிடம் இருந்த பர்ஸ், ஏ.டி.எம் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர்.

கடந்த அக். மாதம் மருதமலை சென்றவர், தன்னை தாக்கிய கும்பலை தேடி இருக்கிறார். அச்சமயம் திருநங்கை மாசிலாமணி, மணி ஆகியோர் இருந்த வீட்டருகே சென்றபோது தினேஷை இருவரும் யார்? என கேட்டு பேசி இருக்கின்றனர். அப்போது இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தினேஷ் மற்றும் அவரின் பெற்றோர் தாக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் தினேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டு பழிவாங்க எண்ணி இருக்கிறார். 

கடந்த 29ம் தேதியில் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தடைந்த தினேஷ், மாசிலாமணியை கொலை செய்ய அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனலட்சுமி உறங்கிக்கொண்டு இருக்க, அவரை மாசிலாமணி என நினைத்து கொலை செய்துள்ளார். பின் ஆள் மாறிப்போனதை உணர்ந்தவர், அங்கிருந்து பதற்றத்துடன் பழனிக்கு வந்து மொட்டையடித்து மதுரையில் தலைமறைவாக சுற்றியுள்ளார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.