கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சிறுவர் சிறுமிகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்பு...!

கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சிறுவர் சிறுமிகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்பு...!



Children kidnapped by kidnappers rescued by railway security forces..

ரெயில்வே பாதுகாப்பு படையினர் சிறுவர்கள் கடத்தலில் இருந்து மொத்தம் 183 சிறுவர் சிறுமிகளை கடந்த ஒரு மாதத்தில் மீட்டு இருக்கின்றனர். 

புதுடெல்லி, நாட்டின் போக்குவரத்து துறைகளில் மிக முக்கியமான போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வே உள்ளது. இதில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை  கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். தங்களிடம் சிக்கும் சிறுவர் சிறுமிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறைந்த செலவில், அதிக தூரம் கடத்தி செல்வதற்கு ரயில் மூலம் செயல்படுத்திக் கொள்கின்றனர். 

இதனை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு பற்றிய குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் (2017 முதல் 2021 காலகட்டத்தில்) கடத்தல்காரர்களிடம் இருந்து 2,178 பேரை மீட்டுள்ளனர். சிறுவர்கள், மகளிர், ஆடவர் என பாதுகாப்பு, தேவைப்பட்ட 65 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உதவிகளை செய்துள்ளனர்  இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலையில், சிறப்பு ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்பு படை செய்துள்ளது.

இதற்காக அந்தந்த மாநில காவல்துறையினருடன் இணைந்து ரயில்வே படையினர் பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடத்தல் வழக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் செயல்படுவது, கடத்தல்களை கண்டுபிடிப்பது ஆகிய பணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, 151 சிறுவர்கள், 32 சிறுமிகள் மற்றும் 3 பெண்களை கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு தொடர்புடைய கடத்தல்காரர்கள் 47 பேரை கைது செய்து இருக்கின்றனர். 

இந்த கடத்தல்களுக்கு பின்னால், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துதல், விபசாரம் மற்றும் கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்துவது, வலுக்கட்டாயமாக அடிமைகளாக வீட்டு வேலையில் ஈடுபடுத்துவது, மேலும் தத்து கொடுப்பது, பிச்சை எடுக்க வைப்பது, போதை பொருள் கடத்தல், உடல் உறுப்புகளை விற்பது போன்ற குற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதும்,மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதும் அதிக அளவில் நடந்து வருகிறது.