நியாயமான கூலி வாங்கிய கட்டிட மேஸ்திரி தொழில் போட்டியால் அடித்தே கொலை; தூக்கிலிட்டு நாடகமாடிய பயங்கரம்.!

நியாயமான கூலி வாங்கிய கட்டிட மேஸ்திரி தொழில் போட்டியால் அடித்தே கொலை; தூக்கிலிட்டு நாடகமாடிய பயங்கரம்.!



Chennai Kodungaiyur Man Killed due to Business Problem

குறைவான தொகையை பணிக்கு வாங்குவதால் தனக்கு வேலை வரவில்லை என ஆத்திரப்பட்டு கட்டிட மேஸ்திரி, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு மேஸ்திரியை அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள கொடுங்கையூர் தண்டையார்பேட்டை, ஆதிவாசி காலனியில் வசித்து வருபவர் ஜெயபால் (வயது 47). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பெரியநாயகி (வயது 38). தம்பதிகளுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் ஜெயபாலின் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட, ஜெயபால் மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, மதுபானம் அருந்தியுள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஜெயபாலை நீண்ட நேரம் அழைத்தும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்க்கையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெயபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஜெயபாலன் உடலில் இடது கண், தொடையில் காயம் இருந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் தற்கொலை வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

chennai

விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் முன்னுக்கு பின் தகவல் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர் பல பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, ஆறுமுகம் (வயது 43), ஜெயபால் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது தரப்பு வேலையாட்களை அழைத்து பணிக்கு செல்வது வழக்கம். இதில், ஜெயபால் ரமேஷை விட குறைவான கூலியை வாங்கி வந்துள்ளார்.

இதனால் அதிக வேலை வாய்ப்பு ஜெயபாலுக்கு கிடைக்க, ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜெயபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று, ஜெயபால் போதையில் இருப்பதை அறிந்த ஆறுமுகம் கொலையை அரங்கேற்றி இருக்கிறார். பின்னர் அவரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பாவித்து இருக்கிறார். இந்த கொலைக்கு ரமேஷும் உடந்தையாக இருந்தாரா? என்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் திருச்சியை ஏற்படுத்தியுள்ளது.