"நான் சாவுறேன், குழந்தைகளை பார்த்துக்க" - லோன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை; வங்கி ஊழியர்களுக்கு தர்ம அடி.!

"நான் சாவுறேன், குழந்தைகளை பார்த்துக்க" - லோன் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை; வங்கி ஊழியர்களுக்கு தர்ம அடி.!



Chennai Kasimedu man Suicide Bank Employee Forced Loan Debt Issue 

 

சென்னையில் உள்ள காசிமேடு, விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் (வயது 38). எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். ரகுராமனின் மனைவி சாமுண்டீஸ்வரி. தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் ரூ.2 இலட்சம் கடன் வாங்கிய ரகுராமன், மாத தவணையாக ரூ.6 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார். சில மாதமாக வேலை சரிவர கிடைக்காததால், வங்கி தவணை செலுத்த இயலவில்லை. 

இதனால் சம்பந்தப்பட்ட வங்கியின் ஊழியர்கள் 2 பேர் ரகுராமனின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதில் மனமுடைந்துபோன ரகுராமன், வேலைக்கு சென்று அங்கிருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். 

அவர், "வங்கி அதிகாரிகள் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். நான் தற்கொலை செய்கிறேன். நீ குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக்கொள்" என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். 

chennai

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சாமுண்டீஸ்வரி, விரைந்து கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பதறியபடி சென்றபோது, அவரின் உயிர் பிரிந்த நிலையில் ரகுராமன் சடலமாக தொங்கியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த ரகுராமனின் உறவினர்கள் பெரும் ஆத்திரத்தில் இருந்த நிலையில், வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளது, வந்து வாங்கி செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

பணம் கிடைக்கப்போகிறது என ஆவலாக வந்த அதிகாரிகளை சூழ்ந்துகொண்ட உறவினர்கள், வங்கி பணியாளர்களை அடித்து நொறுக்கி காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக இருதரப்பிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.