டேட்டிங் ஆப்பில் பெண்தேடல்.. காசி தியேட்டர் வாசலில் கும்மாங்குத்து, பணம் பறிப்பு.. இளைஞர்களே உஷார்.!

டேட்டிங் ஆப்பில் பெண்தேடல்.. காசி தியேட்டர் வாசலில் கும்மாங்குத்து, பணம் பறிப்பு.. இளைஞர்களே உஷார்.!



chennai-choolaimedu-man-searching-woman-dating-locanto

லாகேண்டோ டேட்டிங் செயலி மூலமாக பெண்ணிடம் ஆயிரங்களை இழந்த மருத்துவ பிரதிநிதி, அதே பெண்ணை தேடி சென்று இரு சக்கர வாகனத்தையும், தங்க சங்கிலியையும் பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 24). இவர் மருத்துவ பிரதிநிதியாக இருந்து வருகிறார். இந்நிலையில், லோகாண்டோ என்ற டேட்டிங் செயலி மூலமாக பெண்ணை நேரில் சந்திக்க ஆன்லைனில் ரூபாய் ஐந்தாயிரம் பணம் செலுத்தி உள்ளார். சுதர்சனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர், மிகவும் நெருக்கமாக பேசி இருக்கிறார். 

விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதி அளித்த நிலையில், தன்னுடன் ஒருநாள் பொழுதை கழிப்பதற்கு ரூபாய் ஐந்தாயிரம் போதாது என்றும் ஆசையை தூண்டும் விதமாக பேசி, இரண்டு தவணையாக ரூபாய் 18 ஆயிரம் பணத்தை வாங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு இளம்பெண் நேரில் வரவில்லை என்றதால், லோகாண்டோ செயலின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சுதர்சன் புகார் கொடுத்துள்ளார். 

chennai

லோகண்டோ செயலி நிர்வாகமோ பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என தெரிவித்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் சுதர்சனின் நம்பருக்கு பெண்மணி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சுதர்சன் பணத்தை திரும்பி தராத பட்சத்தில், காவல்நிலையத்தில் பணமோசடி புகார் அளிக்க உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். 

இதனையடுத்து, எதிர்முனையில் பயந்தது போல பேசிய பெண்மணி, திங்கட்கிழமை மாலை ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறவே, பெண் நேரில் வரச் சொல்கிறார் என்பதால் முன்னெச்சரிக்கை இல்லாமல் தனது இரு சக்கர வாகனத்துடன் சுதர்சன் அங்கு சென்றுள்ளார். 

chennai

காசி தியேட்டர் வாசலில் காத்திருந்த சுதர்சனை, அங்கு வந்த 4 பேர் கும்பல் தர்மஅடி கொடுத்து அவரது இரு சக்கர வாகனத்தையும், கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளது. சிறிது நேரம் கழித்து சுதர்சனை போனில் அழைத்த அந்த கும்பல், நடந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அந்த பெண்களுடனான சமாச்சாரத்தை அம்பலப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். 

இதனால் பயந்து போன சுதர்சன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 4 பேர் உட்பட பெண் கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது. ஏற்கனவே டேட்டிங் போன்ற செயலிகள் மூலமாக பல பணம் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், இதுபோன்ற டேட்டிங் செயலிகளை காவல்துறையினர் தடை செய்ய வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வயது ஆர்வக்கோளாறில் செய்யக்கூடாததை செய்தால் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.