தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய விவசாயி வேட்பாளர்கள்.! குவிந்துவரும் ஆதரவு.!

தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய விவசாயி வேட்பாளர்கள்.! குவிந்துவரும் ஆதரவு.!


candidates-who-collected-money-from-the-public-to-pay-t

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் முக்கிய கட்சிகள் தற்போதுவரை வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள், விவசாயிகள் நலன் சார்ந்த அமைப்புகள் சேர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டனர். அந்த கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. 

மேலும் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயார் என்றும், சட்டவிரோதமாக சொத்துகள் குவித்திருப்பது கண்டறியப்பட்டால் அதனை நாட்டுடமை ஆக்கவும் உறுதி அளிக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த கூட்டமைப்பின் சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சண்முகசுந்தரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அசாவீரன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராவணன் ஆகிய இருவரும் நேற்று பெரம்பலூர் பேரூந்துநிலையத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டவேண்டிய டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரம் கட்டுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பாக 1 ரூபாய் வழங்க கோரி, பொதுமக்களிடம் மடிப்பிச்சை கேட்டுள்ளனர்.

இதனைப்பார்த்து ஆச்சரியமடைந்த பொதுமக்களும் தங்களால் முடிந்த பணத்தை அவர்களிடம் வழங்கினர். பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை வைத்து தான் டெபாசிட் தொகை கட்ட போவதாக அந்த வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்டுக்காக மக்களிடம் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மத்தியில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு வேட்பாளர்களின் செயல் தற்போது தமிழகத்தில் பேசும்பொருள் ஆகியுள்ளது. இதுபோன்ற வேட்பாளர்கள் தான் தமிழகத்திற்கு தேவை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.