தனியார் பேருந்து - கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 25 பேர் படுகாயம்.. பரபரப்பு சம்பவம்.!!

தனியார் பேருந்து - கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 25 பேர் படுகாயம்.. பரபரப்பு சம்பவம்.!!



buses-collide-head-to-head-near-edappadi-25-people-inju

எடப்பாடி அருகே நேருக்கு நேர் பேருந்துகள் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பேருந்து ஒன்று நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது.

கல்லூரி பேருந்து எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி மெதுவாக வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எடப்பாடி சங்கரி பிரதான சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து மட்டும் வேகத்தை குறைக்காமல் மற்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த பேருந்து எதிர்திசையில் எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்துடன் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இரு வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கி சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் தனியார் கல்லூரி பேருந்தில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அவர்கள் மீட்டு பேருந்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். தகவலறிந்து, எடப்பாடி சங்ககிரி கொங்கணாபுரம் ஆகிய பகுதியிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் பலத்த காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநராக எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (42), கல்லூரி பேருந்து ஓட்டுநர் மேட்டூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (32), மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த இருப்பாளி பகுதியைச் சேர்ந்த சின்னகண்ணன் (60) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றிய கொங்கணாபுரம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.