டயர் வெடித்ததால் டூ-வீலரை இடித்து, டிரான்ஸ்பார்மர் மீது மோதி தீப்பற்றிய பேருந்து: டூ-வீலரில் வந்த 2 இளைஞர்கள் பரிதாப பலி..!

டயர் வெடித்ததால் டூ-வீலரை இடித்து, டிரான்ஸ்பார்மர் மீது மோதி தீப்பற்றிய பேருந்து: டூ-வீலரில் வந்த 2 இளைஞர்கள் பரிதாப பலி..!



bus-burst-into-flames-after-colliding-with-a-two-wheele

கடலூர் மாவட்டம், கடலூர் முதுநகர் அருகேயுள்ள பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்திஎன்பவரது மகன் சபரிநாதன் (30). அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் செந்தில்குமார் (38) இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் டூ-வீலரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 7 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை என்ற இடத்தில் சென்றனர். அந்த சமயத்தில் கடலூரில் இருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பெரியகாட்டுசாகை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதுடன், சபரிநாதன் சென்ற டூ-வீலர் மீது மோதி, அங்குள்ள துணைமின் நிலையம் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் டூ-வீலரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். செந்தில்குமார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் டிரான்ஸ்பார்மர் மீது மோதிய பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறுது நேரத்தில்  தீ, பஸ் முழுவதும் பரவியதில் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த குள்ளஞ்சாவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பஸ் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.