குட்டிகளுடன் ஹாயாக குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரிந்த கரடி; வேட்டு வைத்து விரட்டிய வனத்துறையினர்...!

குட்டிகளுடன் ஹாயாக குடியிருப்பு பகுதியில் சுற்றிதிரிந்த கரடி; வேட்டு வைத்து விரட்டிய வனத்துறையினர்...!



bear-entering-residential-area

ஆம்பாசமுதிரம், கல்லிடைக்குறிச்சி மணிமுத்தாறு பகுதியில் இரவில் குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் கரடிகள் சுற்றுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே தீ பந்தங்களுடன் வனத்துறையினர் கரடிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் விவசாயத்தோடு  ஆடு மாடு ஆகியவையும் வளர்த்து வருகின்றனர்.
 
இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் விளைநிலங்களுக்கு யானை கரடி சிறுத்தை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் குட்டிகளுடன் கரடி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தகவலறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். மேலும் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஹரிபாபு என்பவர் வீட்டில் வளர்த்த நாயை தூக்கிச் சென்று அடித்துக் கொன்றது.

குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவதை தடுத்திட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் வனச்சரகர்கள் சுரேஷ், பாலமுருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பத்து பேருடன் நேற்று இரவில் மணிமுத்தாறு குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகளை விரட்டிட தீ பந்தங்களுடன் ரோந்து சென்றனர்.

அப்போது மணிமுத்தாறு காவலர்கள் பயிற்சி அணி கமாண்டர் வீட்டின் பின்புறம் ஒரு கரடி இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திரிந்த கண்டனர்,உடனடியாக வெடி போட்டு தீப்பந்தம் ஏந்தி காட்டுக்குள் விரட்டினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் கையில் தீப்பந்தம் வைத்திருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.