மாணவர்களுக்கு இடையே தொடரும் மோதல்!,, திணறும் ஆசிரியர்கள்: கவலையில் போலீசார்..!

மாணவர்களுக்கு இடையே தொடரும் மோதல்!,, திணறும் ஆசிரியர்கள்: கவலையில் போலீசார்..!



An ongoing conflict between school students

கடலூர் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்களுக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், புவனகிரி காவல்தூறையினர் இருதரப்பை சேர்ந்த மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் திடீரென வடக்கு திட்டை மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த இரு ஊர்களை சேர்ந்த மாணவர்களும் பள்ளி வளாகத்திலேயே மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர்கள், கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை விலக்கி விட்டனர். இதற்கிடையே இரு ஊர்களை சேர்ந்த மாணவர்களும், புவனகிரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், ஆதிவராகநல்லூரை சேர்ந்த 7 மாணவர்கள் மீதும், வடக்கு திட்டையை சேர்ந்த 4 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.