பிறந்தநாள் கொண்டாடிய இரண்டே நாட்களில்... குழந்தைக்கு நேர்ந்த பகீர் சம்பவம்...!
பிறந்தநாள் கொண்டாடிய இரண்டே நாட்களில்... குழந்தைக்கு நேர்ந்த பகீர் சம்பவம்...!
ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ராஜேஸ்வரி காலணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண்குமார். இவர், வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருக்கு, இரட்டையராக பிறந்த ஆண் குழந்தைகள் இருவரும், ஓரு வயதில் இளமாறன் என்ற குழந்தையும் உள்ளனர்.
கடந்த 14-ஆம் தேதி விடுமுறை என்பதால் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் தேவகி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, குழந்தை வீட்டின் கழிவறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் விளையாடி இருக்கிறான். இதை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து குழந்தையின் அம்மா தேவகி குழந்தையை தேடியபோது, தண்ணீர் வாளிக்குள் நீரில் மூழ்கியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் குழந்தையின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். குழந்தை இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலாவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய இரண்டு நாட்களிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.