செல்ஃபோனால் வந்தது வினை: ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்..!

செல்ஃபோனால் வந்தது வினை: ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்..!



A boy who tragically died after being hit by a train

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஜெகன் (16). இவர் கூடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முடி வெட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ஜெகன், எரியோட்டிற்கும் பாளையத்திற்கும் நடுவே இருந்த தண்டவாளத்தை  செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் துணை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே காவலர்கள் விரைந்து சென்றனர்.

ரெயில் மோதி உயிரிழந்த ஜெகனின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜெகன் செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்தது தெரியவந்தது.