கொரோனா போரில் மரணம்..! இதுவரை 9 தூய்மை பணியாளர்கள் கொரோனாவால் இறந்ததாக தகவல்..! பலர் பாதிப்பு..!
சென்னை மாநகராட்சியில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது வரை 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக இந்தியாவில், நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு சமீபகாலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனாவுடனான போரில் நேரடியாக போரிடும் மருத்துவர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள் போன்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டு 9 தூய்மை பணியாளர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளநிலையில் தூய்மை பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.