வயல்வெளியில் 75 வயது மூதாட்டியின் சடலம்; 13 சவரன் நகைகள் மாயம்!,, உறவினரே கொலை செய்தது அம்பலம்..!

வயல்வெளியில் 75 வயது மூதாட்டியின் சடலம்; 13 சவரன் நகைகள் மாயம்!,, உறவினரே கொலை செய்தது அம்பலம்..!


75-year-old woman strangled to death 13 Sawaran jewels stolen

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சின்னம்மாள் (75). கணவரை இழந்த சின்னம்மாள் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பக்கத்து ஊரான வக்கீல்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மோட்டார் அறையில் ஒயரால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமையன்று சின்னம்மாள் சடலமாக கிடந்தார்.

சின்னம்மாள் அணிந்திருந்த 13 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சின்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதன் மூலம் சம்பவம் நடந்த அன்று சின்னம்மாளின் உறவினரான சுப்பிரமணி என்பவர், அவரை வயல்வெளிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து,  அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பணத்திற்கு ஆசைப்பட்டு சின்னம்மாளை கொலை செய்தது சுப்பிரமணிதான் என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.