தடை செய்யப்பட்ட 520 கிலோ குட்கா கடத்தி வரப்பட்ட 3 கார்கள் பறிமுதல்,..6 பேர் அதிரடி கைது..!

தடை செய்யப்பட்ட 520 கிலோ குட்கா கடத்தி வரப்பட்ட 3 கார்கள் பறிமுதல்,..6 பேர் அதிரடி கைது..!



520-kg-gutka-seized-and-6-smugglers-were-arrested

தடை செய்யப்பட்ட 520 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கம் அருகேயுள்ள ராஜமங்கலம் பகுதியில் குட்கா பொருட்கள் கைமாற்றப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  ராஜமங்கலம் டெம்பிள் பள்ளி சந்திப்பு அருகே துணை ஆணையரின் தனிப்படை போலீசார் சொகுசு கார் ஒன்றை மடக்கிப்பிடித்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்தவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின்பேரில் காவல்துறையினர் மேலும் 2 கார்களை மடக்கிப் பிடித்தனர். அதிலும் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன.

இதனையடுத்து மூன்று காரில் இருந்த 6 பேரையும் ராஜமங்கலம் காவல் நிலையம்  அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (39) படப்பை  பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (22), அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் (23), ஆண்டனி பாஸ்கர் (23), கார்த்திக் (19), குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த குமார் (36)    ஆகியோர் என தெரியவந்தது.

காரிலிருந்து 520 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்துள்ள காவல்துறையினர்  குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.