பட்டப் பகலில் 17 வயது இளைஞனை ஓட ஓட விரட்டி வெட்டியை கும்பல்... சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!



17 years old boy chased away by gang at Chennai

சென்னை பெரவள்ளூர் கே.சி கார்டன் 5வது தெருவை சேர்ந்தவர் திவாகர்(17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவாகர் வீட்டின் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பல் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் அந்த இளைஞர்களிடம் சென்று இங்கு யாரும் ரகளையில் ஈடுபட கூடாது என கூறி அந்த கும்பலை விரட்டியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த அந்த கும்பல் மறுநாள் காலை கல்லூரி சென்ற திவாகரை பின் தொடர்ந்துள்ளனர். திவாகர் கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பிய சமயத்தில் அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திவாகரை வெட்ட கத்தியுடன் துரத்தியுள்ளது. அவர்களிடமிருந்து தப்பிக்க சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிய திவாகர் பிரபல துணிக்கடையில் நுழைந்து அங்குள்ள ஆடை மாற்றும் அறையில் நுழைந்து கதவை பூட்டி கொண்டுள்ளார். 

chennai

இருப்பினும் விடாமல் கதவை உடைத்து அந்த கும்பல் திவாகரை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது. இச்சம்பவம் குறித்து துணிக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து திவாகரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த பவன், கங்கா, குள்ளா, அமர் மற்றும் உமர் ஆகியோர் திவாகரை வெட்டியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த ஐந்து நபர்களையும் தேடி வருகின்றனர்.