'தோனிக்கு தெரியும் எப்போது எப்படி ஆட வேண்டுமென்று' விமர்சகர்களின் வாயடைத்த இந்திய வீரர்.!

'தோனிக்கு தெரியும் எப்போது எப்படி ஆட வேண்டுமென்று' விமர்சகர்களின் வாயடைத்த இந்திய வீரர்.!


world cup 2019 - m.s.dhoni - viraht kohli

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்தது.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

World cup 2019

இந்திய அணி பேட்டிங் செய்யும்போது 6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனி, ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாண்டியா 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த தோனி 56 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கை தொடங்கிய தோனி முதலில் மெதுவாக ஆடினாலும் கடைசி கட்டங்களில் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தோனி 56 ரன்கள் எடுத்தாலும் மெதுவாகத்தான் ஆடுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போதும் தோனியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது:

World cup 2019

தோனிக்கு களத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தெரியும். ஆட்டத்தின் நடுவில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரின் ஒரே ஒருநாள் சரியாக அமையவில்லை என்றால் எல்லோரும் உடனே அதை பற்றி பேச தொடங்கி விடுகிறார்கள்.

நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக நிற்போம். எங்களுக்காக அவர் பல போட்டிகளை வென்று கொடுத்து உள்ளார். உங்களுக்கு அவசரமாக 15-20 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் தோனிதான் தேவைப்படுவார். அவர்தான் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்கு தேவையான ரன்கள் எடுத்து கொடுப்பார்.

World cup 2019

அவரின் அனுபவம் காரணமாக 10ல் 8 போட்டிகள் எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்த தோனியின் அனுபவம் தேவை. அவர் எப்போதும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார். 260 என்பது நல்ல இலக்குதான்.

அவர் இந்த போட்டியின் லெஜண்ட். அது அப்படியே தொடர வேண்டும். அவர் 300 ரன்கள் அடிக்க ஆசைப்பட்டு ஆடி அவுட்டாகி இருந்தால், 230 ரன்களுக்கு நாங்கள் சுருண்டு இருப்போம். கடைசி இரண்டு போட்டிகளில் வென்றாலும் , நாங்கள் சரியாக ஆடவில்லை. வரும் போட்டிகளில் அதை சரி செய்வோம், என்று கோலி தெரிவித்துள்ளார்.