சிங்கம் மீண்டும் முழு திறமையுடன் களமிறங்கும்.. தோனியின் மீது இர்பான் பதான் நம்பிக்கை!



what would be said by MSD of 2010-11 to MSD of 2020

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த 13 ஆவது சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மறக்க முடியாது. காரணம் 13 சீசன்களில் முதல் முறையாக சென்னை அணி பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் முதல் அணியாக வெளியேறியது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 8 தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் தோனி சரியான பார்மில் இல்லாதது தான் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

MS Dhoni

இந்த சீசனில் தோனியின் பேட்டிங் எடுபடவில்லை. 14 மாத இடைவெளிக்கு பிறகு விளையாடிய தோனி இந்த தொடரில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தார், சராசரி 25. இந்த ஐபிஎல் தொடரில் தான் முதல்முறையாக தோனி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் இது தான் அவருக்கு கடைசி ஐபிஎல் போட்டியா என்ற கேள்விக்கு "நிச்சயம் இல்லை" என அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், "2010 - 2011 காலகட்டத்தில் கேப்டனாக இருந்த தோனி 2020 தோனியிடம் பேசினால் அடுத்த சீசனில் எப்படி இருக்க வேண்டும் என கூறுவார்?" என்ற கேள்வி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அடுத்த சீசனில் நல்ல உடல் தகுதியுடனும் முழு திறமையுடனும் களமிறங்க வேண்டும் என கூறுவார்" என பதிலளித்துள்ளார். மேலும் தோனியால் மீண்டும் அடுத்த சீசனில் முழு திறமையுடன் களமிறங்க முடியும் என்றும் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.