வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்! டி-20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வரும் ஹிட் மேன் படை..!

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்! டி-20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வரும் ஹிட் மேன் படை..!



the-indian-team-won-the-first-t20-match-by-68-runs

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி-20 போட்டிகளில்  விளையாடி வருகிறது. முன்னதாக ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

டி-20 தொடரில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் அணி டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு கேப்டன்  ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் தொடக்கம் அளித்தார். முதலில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து நெருக்கடியை ஏற்படுத்தினர்.

மாறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 191 ரன்கள் இலக்கை நோக்கி துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ்-சமார் புரூக்ஸ் ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. இதில் கைல் மேயர்ஸ் 15 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ரன் கணக்கை தொடங்கும் முன்பே டக்-அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதன் பின்னர் சமார் புரூக்ஸ் 20 ரன்களிலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 122 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.