இதுதாங்க நம்ம டான் ரோஹித்... ரொம்ப சிம்பிளா என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

இதுதாங்க நம்ம டான் ரோஹித்... ரொம்ப சிம்பிளா என்ன சொல்லிருக்காரு பாருங்க..!



rohit talk about yesterday match

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதியது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 

நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அரையிறுதி சுற்றுக்கு நாங்கள் தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்களுடைய முதல் இலக்கு இதுவாகத்தான் இருந்தது. அதிலிருந்து அரை இறுதிப் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து அணுக வேண்டும். லீக் சுற்றில் முதல் 7 ஆட்டங்களில் நாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது பாராட்டுக்குரியது. 

இந்திய அணியின் பல வீரர்கள் இந்த வெற்றிக்கு தங்களுடைய சிறப்பான பங்களைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்து விளையாடுவது மிகவும் சவாலான விஷயமாகவே இருந்தது. இது போன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். பேட்ஸ்மேன்களுக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். 

அதேபோல் நமது அணியின் வேகபந்துவீச்சாளர்கள் செயல்பாடுகளும் பிரமிக்கும் வகையில் இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் இன்று தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் யாரென்று நிரூபித்து விட்டார். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர் செயல்பட்டார். தொடர்ந்து அவர் கடின உழைப்பை பயிற்சியில் செய்து வருகிறார். அதன் வெளிப்பாட்டை தான் நாம் இன்று கண்டோம் என தெரிவித்துள்ளார்.